Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

மன்னாரில் 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

நாளை சனிக்கிழமை(21) ஆம் திகதி இடம்பெறவுள்ள 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கு வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(20)மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடை பெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அதிரடிப்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையமான மாவட்ட செயலக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64 பொலிஸாரும்,47 விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். முறைப்பாட்டு பிரிவுக்கு 11 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 98 வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிஸார் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்து வரும் போது பொலிஸார் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் வன்முறைகள் குறித்து எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை. சாதாரண சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 28 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது. குறித்த முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண் தெரியாதவர்கள் விசேட ஏற்பாடுகளுக்கு அமைய தங்களுக்கு தெரிந்த ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியும்.

நாளைய தினம் சனிக்கிழமை மன்னாரில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இதன் போது மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments