இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை(18) காலை 9.00 மணியளவில் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
தமிழரசு கட்சியின் மன்னார் கிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சால்ஸ்நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
-அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.