மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
-குறித்த போராட்டத்தை குறித்த காலப்பகுதிக்குள் கைவிடுமாறு கோரி அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் தீவு மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இவ் விசேட சந்திப்பின் உத்தியோபூர்வ கடிதம் இன்று(14) மாலை மன்னார் பிரஜைகள் குழு தலைவரிடம் மன்னார் அரசாங்க அதிபர் கையளித்தார்.
காற்றாலை மின்சாரம் கனிம மணல் அகழ்வை நிறுத்தக் கோரி தொடர் போராட்டம் மன்னார் நகர மத்திய சுற்று வட்ட பிரதான வீதி பகுதியில் 12 நாளாக இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தற்காலிகமாக ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதுடன் குறித்த காலத்தில் திட்டம் தொடர்பில் சாதகமான மற்றும் பாதகமான அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்குமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.