மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகள் சேகரிக்க சென்ற மன்னார் நகரசபை பெண் ஊழியர் ஒருவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின் அலுவலகதத்தில் தாக்கப்பட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார் நகரசபை ஊழியர்களால் கண்டன போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது
மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகளை அறவிடுவதில் மன்னார் நகர சபை பெண் ஊழியர்கள் இருவர் கடமையில் கடந்த வியாழக்கிழமை (12) ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வன்னி ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வீட்டுக்கு இரு பெண் ஊழியர்களும் சென்று நிலுவையிலுள்ள ஆதனவரியை சேகரிக்கச் சென்றபோது இவ் அலுவலகத்துக்கு பொறுப்பு வாய்ந்தவருக்கும் அங்குச் சென்ற பெண் ஊழியருக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரம் கொண்ட ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வசந்தன் என்பவர் அங்கு சென்ற பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து தள்ளி விட்டதாகவும் தங்கள் கடமைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் மன்னார் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டைக் கண்டித்தும் சம்மந்தப்பட்ட நபரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள் . ஊழியர்கள் , மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொது மக்களும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மன்னார் நகர சபைக்கு முன்னால் மேற்கொண்டனர்
‘பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும்’ ‘பண பலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா?’வசந்தனை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா ரெலோ தலைமைத்துவம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.