Friday, October 17, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் தீவுக்குள் காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்வு பொருத்தமானதாக இல்லை!

மன்னார் தீவுக்குள் காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்வு பொருத்தமானதாக இல்லை!

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம்.ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வு தொடர்பான சட்ட ரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒன்றிணைத்து கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதோடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழு,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னாரில் இன்றைய தினம் வியாழக்கிழமை(23) பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து விசேட சந்திப்பை மேற்கொண்டோம். மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட அமைப்புக்களை இவ்வாறு சந்தித்து மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்.

மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்ளுகிறார்கள்.காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டம்.அதில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு திட்டத்தின் அடிப்படையில் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மற்றைய இரு திட்டங்களும் உடனடியாக செயல் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து காற்றாலை அமைக்கின்றதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.

குறிப்பாக மீன்பிடி சமூகம்  இதன் விளைவாக வழமையாக அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறை கின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவதும் உள்ளடங்களாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக கரைவலை மீன்பிடி சம்பந்தமான முறையில் பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதை வைத்தும்,வேறு பல விஷயங்களை வைத்தும் காற்றாலையினை மன்னார் தீவுடன் சேர்ந்து அமைப்பது மன்னார் தீவுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது.

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம்.ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்திலே காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது இங்கு வாழும் அனைவரதும் நிலைப்பாடு.இவை சரியான முறையில் ஆராய்ந்து இச் செயல்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதனால் பல வித பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிய வருகிறது.

எனவே இத்திட்டங்களை நிறுத்துவதற்கும்,ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் சில மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ் விடையங்களை உடனடியாக கவனத்தில் எடுப்போம்.இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதனடிப்படையில் மன்னாரில் இருந்து மக்கள் சார்பாகவும் இவ்வாறான ஒரு செயல் திட்டத்தை அவர்களுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்வரும் வாரம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

மன்னாரில் உள்ள பல ஏக்கர் தனியார் காணிகளும் அபகரிக்கப்பட்டு அதனைச் சுற்றி வேலி அடைத்து பல செயல் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகிறது- என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments