மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது.
நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தில் ஒழுங்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் மன்னார் சுகாதரதுறை,சமூக மட்ட அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரால் இந்திய அரசாங்கத்திடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.
குறித்த நிதியில் அவசர சிகிச்சைபிரிவு,கதிரியக்க பிரிவு,உள்ளடங்களாக பல்வேறு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படவுள்ளதுடன் மருத்துவ உபகரணங்களும் கொள்ளவனவு செய்யப்படவுள்ளது.
அதே நேரம் கடந்த வருடம் முன்னைய இந்திய உயர்ஸ்தானிகரிடம் CT Scan தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியியில் CT SCAN உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.