மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விளையாட்டு விழா மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் டிலிசன் பயஸ் தலைமையில் நேற்று (13) மாலை மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உடல்வலிமை மற்றும் மனவலிமையை விருத்தி செய்யும் நோக்கோடு இடம் பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,மாந்த,முசலி,மடு ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான தட்டெறிதல்,குண்டெரிதல்,ஈட்டி எரிதல்,ஓட்டம்,நீளம் பாய்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதல் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாற்றுதிறனாளிகள் தேசிய ரீதியாக இடம் பெறவுள்ள மாற்றுத்திறனாளிகளிக்கான போட்டியில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.